|
சபரிமலை வருமானம் : ரூ.43 கோடி |
|
Wednesday, 16 December 2009 08:41 |
|
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் நெரிசல் தொடர்ந்து நீடிக்கிறது. இதைத் தொடர்ந்து தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவசம்போர்டின் வருமானம் 43 கோடி ரூபாயாக உயர்ந்தது. சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. எல்லா நேரத்திலும் 18ம் படியேறுவதற்கான வரிசை, மரக்கூட்டம் வரை காணப்படுகிறது.
நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் 18ம் படியேறுவதால் வடக்கு வாசலிலும் தரிசனத்துக்கு நீண்ட வரிசை காணப்படுகிறது. இதனால், தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு பதிலாக 3.45க்கு நடை திறந்து, இரவு 11 மணிக்கு பதிலாக 11.45க்கு நடை அடைக்கப்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் கூடுதலாக பக்தர்களுக்கு தரிசனம் கிடைத்தது. மண்டல காலம் துவங்கி நேற்று முன்தினம் வரை சபரிமலை வருமானம் 43.18 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 37.32 கோடி ரூபாயாக இருந்தது. அரவணை விற்பனை மூலம் 18.51 கோடி ரூபாயும், அப்பம் விற்பனையில் 4.13 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் 15.92 கோடி ரூபாய்க்கு அரவணையும், 3.66 கோடி ரூபாய்க்கு அப்பமும் விற்பனை ஆகியிருந்தது. காணிக்கையாக இந்த ஆண்டு 15.60 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது 14.08 கோடி ரூபாயாக இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், கேரள அரசு போக்குவரத்துக் கழகம் கடந்த ஆண்டை விட இரண்டாயிரம் சர்வீஸ்கள் கூடுதலாக இயக்கியுள்ளது. இதில், நிலக்கல்லுக்கு 1,400 சர்வீஸ்களும், வெளியூர்களுக்கு 600 சர்வீஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன. நிலக்கல் சர்வீசில் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பக்தர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த 8ம் தேதி 570 சர்வீஸ்களும், நேற்று 600 சர்வீஸ்களும் நிலக்கல்லுக்கு இயக்கப்பட்டுள்ளன.
|